Wednesday, October 26, 2016

மல்லிகைப்பூ பூத்திருக்கு அது மழையில நனஞ்சிருக்கு...

மார்கழி மாத பனிவிழும் இரவுகளின் மல்லிகை வாசத்தை நுகர்ந்திருக்கிறீர்களா? மனுசனை சாவடிக்கும்! நான் குறிப்பிட்டது செடிகளில் பூத்துக்கிடக்கும் பனிமலர்களின் வாசத்தை மட்டுமே. தாவனிக்காரிகளின் சடைப்பின்னலில் தூக்கிலிடப்பட்டு வாசம் பரப்பும் மல்லிகையெல்லாம் வேறு ரகம். கிட்டத்தட்ட ஒருவித யோகா நிலை. மனம் விலகாது.  அடித்துச் சொல்லலாம், ஊருக்குள் 'தலைவன் தலைவியுடன் செல்லும் உடன்போக்கு' அதாவது கூட்டிக்கொண்டு ஓடும் திருமணங்கள் மலிந்து கிடந்ததின் முழுமுதற் காரணிகளிள் இந்தத் திருவிழாக் காலத்து மல்லிகை வாசமும், இளையராசாவும் முதன்மைக் காரணி!

"ஆண்கள் கயிற்றுக்கு வடபுறமாகவும், பெண்கள் தென்புறமாகவும் அமரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என ஒலிபெருக்கிகள் எச்சரிக்கும் மாரியம்மன் கோவில் திருவிழாவின் இரவுகளில் கயிறு ஓரமாவது ஒட்டி அமர்ந்துவிட்ட பிறகும், இன்னும் நெருங்கிச் செல்ல ஹார்மோன்களைத் தூண்டிவிட்ட  நாச சக்திகளில் முதன்மை நேசசக்தி மல்லிகை வாசமாகத்தான் இருக்கும். "ஆமா, பெரிய பெர்லின் சொவரு, கயித்த தூக்கிக்கிட்டு நகந்து ஒக்காருடா" எனும் நண்பர்களின் அறிவுறுத்தல்கள் இன்றும் பசுமையாக நினைவில் ஊஞ்சலாடுகிறது. நேரங்கடந்து கலந்து கொள்ளும் திருவிழா இரவுகளில் இடங்கிடைக்காமல் நின்று கொண்டே ரசிக்கும் ரசனைகளில் பனிக்காற்றோடு ஜில்லென உள்ளிளுத்த மல்லிகை வாசமும் கூட அவ்வாறே ஊஞ்சலாடுகிறது.

நிற்க. அல்லது உட்காருக.  இன்றைய மல்லிகை வாசங்களில் மக்கிப்போன சானியாய் வெறுப்படிக்கும் மொக்கைத்தனம் தென்படுவதைக் கவனித்திருக்கிறீர்களா? இறக்குமதித் தொழில் நுட்பத்தின் வீச்சு அது. மென்மையான பூவிதழ்களில் திராவகம் தெளித்தாற்போல் ரசாயன மருந்துகளால் மாறிமாறி மூர்ச்சை தெளிவித்தால் சானி வாசம் வராமல் சவ்வாது வாசமா வரும்?  இந்த ரசாயன இழவுகளால் கிடைத்திருக்கும் நன்மை யாதெனில், உடன்போக்குத் திருமணங்களின் என்னிக்கையைக் குறைத்ததன்றி வேறில்லை. காலம் செய்த கோலமாக இன்று இளையராசாவை அனுபவிக்கத் தெரிந்த இளைஞர்களும் வெகுவாகக் குறைந்திருக்கின்றனர். பரிதாபம்!

வேளாண்மையை உயிர்நாடியாகக் கொண்டிருந்த பின்தங்கிய பகுதியாகக்கிடந்த எங்கள் பகுதிகளில் இருபது வருடங்களுக்குள்ளாக உயர்தர வாழ்விடமாக நிலை நிறுத்தியதில் முதலிடம் வாழைக்கு. எங்காளுங்கக்கிட்ட உள்ள ஒரே பிரச்சினை என்னன்னா, ஒருத்தன் ஒரு வெள்ளாமையைச் செஞ்சு வெற்றிக்குறி காட்டிட்டா அதையே நூல்பிடிச்சு துவம்சம் பண்ணிருவாய்ங்க.

 மிளகாய் விவசாயம் பிரபலமாக இருந்த 85-90 காலப்பகுதிகளில் மிளகாய். அதை மொத்தமாகப் பயிரிட்டு முடித்து வைத்த கையோடு தேவ தூதனாய் வாழை வந்தது. எங்கும் செழித்தது. பின்பு ஆடிமாத காற்றுகள் பேரவாக் கொண்டு வாழையை ஓய வைத்த பின்பு கரும்பு உயிர் பெற்றது. 5000 கட்டை பயிரிட்ட ஒருவர் ஆடிமாதக்காற்றில் மொத்தமாய் ஒடிந்து நாசமான வேதனை தாங்காமல் மருந்தைக் குடித்த துன்பியல் நிகழ்வு வேதனையானது.பின்பு,  அரசின் கொள்முதல் விலைத் திருகுதாளங்களால் கரும்பு ஓயத்துவங்கிய 2000 காலப் பகுதிகளில் ரட்சிக்க வந்தது மல்லிகை வேளாண்மை. இன்றுவரை  எங்கள் பகுதி விவசாயங்களை உயிர்ப்புடன் வைத்திருப்பது மல்லிகை மட்டுமே.

 உண்மையிலேயே சொல்லப் போனால், புதுகையின் கீழ் பகுதி துவங்கி தஞ்சையின் தென் மேற்குப் பகுதியான நிலப்பரப்பு வரைக்கும் பெரும்பணம் புரளும் மொய்விருந்து விழாக்களை அனாயசமாக சமாளிக்க அள்ளிக் கொடுத்தது மல்லிகையே! மதுரை மல்லி மதுரை மல்லி என நாடு முழுதும் புகழுண்டு அல்லவா? கிகிகி.. அந்த மதுரைக்கே மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் கனிசமாக  கீரமங்கலத்தின் பூச்சந்தைகளில் இருந்துதான் ஏற்றுமதியாகிறது.

இதில் இப்போதையச் சிக்கல் என்னவெனில் நடைமுறை அளவிலும், உளவியல் அளவிலும் ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கும் ரசாயன பூச்சிக் கொல்லிகளே. மற்ற எந்த ஒரு விவசாயத்தை விடவும் மல்லிகையில் பூச்சிகளின் தாக்குதல் அசுரத்தனமாக இருக்கும். வாலிபர்களை கூந்தல் பூக்கள் சுண்டி இழுப்பது போல் பூக்களின் வாசம் வெற்றிலை பாக்கு வைத்து பன்னீர் தெளித்து பூச்சிகளை வரவேற்கும். குறைந்தது நான்கு நாட்களுக்கு ஒரு முறையாவது மருந்து தெளித்தே ஆகவேண்டும். கவனிக்காமல் விட்டால் முடிந்தது. குட்டம் பிடித்த ரத்தக்கண்ணீர் ராதா போல் ஆகிவிடும் செடி.  பின்பு மொத்தமாக செடிகளுக்கு கிராப் வெட்டிவிட்டு மருந்தடித்து சரி செய்வதற்குள் தாலி அந்துரும்!

வேப்பம்புண்ணாக்கு கரைசலுக்கே தெறித்து ஓடிய பூச்சிகள், இன்றைய ரசாயன மருந்துகளுக்கு பல்லைக்காட்டிச் சிரிக்கின்றன. இந்தத் தோட்டத்தில் காலையில் மருந்து தெளித்தால் அடுத்த தோட்டத்திற்கு பறந்து உட்கார்ந்து கொள்ளும். அங்கு மாலையில் தெளித்தால் இங்கு வந்தேறும். தாவுடா செவல தாவு கதை.  ரசாயன மருந்துகளிலிருந்தே உருவாகும் பூச்சிகளை ஒழிக்க மற்றொரு ரசாயன மருந்து தீர்வாகாது எனும் விழிப்புணர்வு அடையும் வரை  தீரப்போவதில்லை.

வேளாண்மையின் உயிர்நாடி இயற்கை விவசாயம் மட்டுமே. உனருங்கள் உறவுகளே!!!

5 comments:

  1. அருமை... எழுத்துப்பிழையிலும் கவனம் செலுத்துங்கள்... நன்றி...

    ReplyDelete
  2. அருமை... எழுத்துப்பிழையிலும் கவனம் செலுத்துங்கள்... நன்றி...

    ReplyDelete
  3. நன்றி சகோ. அலைபேசியிலேயே ப்ளாக்கரை பயன்படுத்துவதால் பொடி எழுத்துக்களைச் சரிவர கையாள முடியவில்லை. அடுத்தடுத்து சரி செஞ்சிடுவோம்.

    ReplyDelete
  4. Lucky Club Casino Site | LuckyClub.live
    Lucky 카지노사이트luckclub Club Casino. Welcome to our home of slots, live casino, & bingo. Join us for a thrilling and authentic experience. Play free roulette, blackjack, baccarat,

    ReplyDelete
  5. Best casinos to play at the casino in the UK? - Goyang Clan
    The UK Casino Finder will help you find the bet365 es best 데일리벳 casinos that offer real money games like 골인 뱃 slot 해외에서축구중계사이트 games, blackjack, roulette, 아이 벳 25 and many more.

    ReplyDelete